புதுடெல்லி: அந்நிய செலவாணி கையிருப்பை அதிகரிக்க கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 3 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கியுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பில் வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் தங்கம் ஆகியவை அடங்கியுள்ளன. கடந்த 2009ம் ஆண்டில் சர்வதேச நிதியத்திடம் இருந்து ரிசர்வ் வங்கி 200 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. அதன்பிறகு தற்போதுதான் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கியிருக்கிறது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த 4ம் காலாண்டில் ரிசர்வ் வங்கி 3.1 டன் வாங்கியுள்ளது. இதனால் அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் இருப்பு ஓரளவு அதிகரித்துள்ளது. சர்வதேச நிதியத்தில் உள்ள புள்ளி விவரப்படி கடந்த மார்ச் மாதம் வரை பாரத ரிசர்வ் வங்கியில் தங்கத்தின் இருப்பு 560.3 டன்களாக உள்ளது என தெரிய வந்துள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து இந்த தகவல் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறுகையில், கடந்த மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு முன்பு மத்திய அரசு கேட்டுக்கொண்டபடி அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கம் இருப்பை அதிகரிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது என தெரிவித்தனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
அதுபோல், ரிசர்வ் வங்கி நிர்வாக குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது மத்திய அரசு வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டே செயல்படுத்தப்பட்டதா என்றும் உறுதிபட தெரிவிக்கவில்லை. உலகில் உள்ள மத்திய வங்கிகள் அமெரிக்க டாலரில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க தங்கம் கையிருப்பை வைத்திருப்பதை பாதுகாப்பாக கருதுகின்றன. ஆண்டுக்கு சராசரியாக 350 முதல் 400 டன் தங்கம் வாங்குகின்றன.
கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி தங்கம் கையிருப்பில் அமெரிக்கா 8,133.5 டன்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி 3,372.2 டன், சர்வதேச நிதியம் 2,814 டன் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 12வது இடத்தில் உள்ளது. இங்கு கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி இந்தியா 558.1 டன் இருப்பு வைத்துள்ளது. மார்ச்சில் இது 560 டன்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment