கர்நாடக சட்டசபைத் தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள், வாக்களித்ததற்கான மை தடவிய விரலைக் காட்டினால் மசால் தோசை, காபி இலவசமாக வழங்கப்படும் என பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யப் பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதற்கு முன்பு, பெற்றோர்கள் வாக்களித்தால் குழந்தைகளுக்கு நான்கு மதிப்பெண்கள் வழங்க அம்மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மைக் கழகம் முடிவு செய்துள்ளது என அறிவிக்கப்பட்டது.
விஸ்வேஸ்வர ஐயர் என்பவர் மே 12ஆம் தேதியில் வாக்களிப்பவருக்கு இலவச வைஃபை வழங்கப்படும். மேலும், நகல் எடுக்க 1 ரூபாய்க்கு பதில் 25 பைசா மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார். வாக்களிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன். நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை என விஸ்வேஸ்வர ஐயர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணராஜ் என்பவர் ஹோட்டல் நடத்திவருகிறார். முதல் முறையாக வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலைக் காட்டினால், மசால் தோசையும் காபியும் இலவசமாக வழங்கப்படும். மற்ற வாக்காளர்களுக்கு காபி மட்டும் இலவசமாக வழங்கப்படும்.
இன்றைய கால இளைஞர்கள் வாக்களிப்பதனால் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என நினைக்கின்றனர். ஆனால், அவர்களால் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை வரவைக்க வேண்டும். இந்த சிறிய முயற்சி அவர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் என கிருஷ்ணராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment