Thursday, May 10, 2018

காலா- இசை வெளியீடு ரஜினி-ரஞ்சித்தின் காதல்



சிவா

மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்போல ரஜினி பேசும்போது அந்த மைதானத்தில் கூடியிருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். ரஜினியின் வசீகரம், காலா இசை வெளியீட்டின்போது பேசிய சமயத்தில் அதிகம் வெளிப்பட்டது.

தனது தோல்விகளை ஆண்டு வாரியாக வரிசைப்படுத்திய ரஜினி, அந்த ஏமாற்றங்களை மாற்றிய கபாலி படத்தை நோக்கி வந்தார். ரஞ்சித்துடன் தனது கூட்டணி அமைந்தது குறித்துப் பேசத் தொடங்கினார். “சௌந்தர்யா தன்னுடன் கோவா படத்தில் பணிபுரிந்த ரஞ்சித் என்ற இளைஞர் ஒரு டான் கதை வைத்திருப்பதாகச் சொன்னார். டான் என்றதும் எனக்குத் தோன்றியது பாட்ஷா தான். என்றுமே ஒரே ஒரு பாட்ஷாதான். எனவே, வேண்டாம் என்று சொன்ன பின், இல்லை இது வேறு மாதிரி டான். மலேசியாவில் இருப்பவர் என்று சொன்னதும், கதை சொல்ல அழைத்தேன். முதல் பார்வையிலேயே அவரது உடல்மொழியால் என்னை வசீகரித்துவிட்டார் ரஞ்சித். கதையை சொல்லுங்கள் என்றதும், நான் இன்னும் கதையே ரெடி பண்ணல சார். எந்த ஹீரோ கிடைக்கிறாரோ, அவரது வெயிட்டுக்கு ஏற்றதுபோல கதையை ரெடி செய்யலாம் என நினைப்பதாகக் கூறினார். சரி என்னுடைய வெயிட்டு என்ன என்று கேட்டதும், நீங்க செம்ம வெயிட்டு என்றார். எனக்கேற்றதுபோல கதையை ரெடி செய்துகொண்டு வரச்சொல்லி, எத்தனை நாட்கள் வேண்டுமென்று கேட்டேன். 15 நாட்களில் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். நாட்கள் போனது. 15, 20, 30 வரை ஆனது. அவர் வரவில்லை.

எனக்கு சொன்ன நேரப்படி செயல்பட வேண்டும். இல்லையென்றால் பிடிக்காது. எனவே, சௌந்தர்யாவிடம் கேட்டபோது, ரஞ்சித்தை வரச்சொன்னார். என்னைப் பார்க்க வந்தவர், கதையை எழுதிவிட்டதாகவும், ஆனால் ஏதோ ஒரு குறை இருப்பதாகவும் சொன்னார். பரவாயில்லை கதையைச் சொல்லுங்கள் என்றபோது ரஞ்சித் சொன்னது என்னை மிகவும் பாதித்துவிட்டது. “நான் எழுதும் கதை என்னைத் திருப்திபடுத்துவது எனக்கு மிக முக்கியம். எனக்கே பிடிக்கவில்லை என்றால் அதை நான் எப்படிச் செய்ய முடியும். அதுவுமில்லாமல், இந்தப் படம் உங்களுக்கு இன்னொரு படமாக இருக்கும். ஆனால், எனக்கு கிடைக்குமென்று எதிர்பார்க்காத சமயத்தில் கிடைத்திருக்கும் வாய்ப்பு. இதை நான் இன்று தவறாகப் பயன்படுத்திவிட்டால் எனக்கு எதிர்காலமே இருக்காது” என்று ரஞ்சித் கூறினார். அப்போதே முடிவெடுத்துவிட்டேன் இவர்தான் இயக்குநர் என்று.

ரஜினியை படிக்கச் சொன்ன ரஞ்சித்

சரியென்று பத்து நாட்கள் எடுத்துக்கொள்ளச் சொன்னேன். பத்து நாட்கள் கழித்து கையில் ஒரு ஃபைலுடன் வந்தார். கதையைச் சொல்லுங்கள் என்றதும், நான் கதை சொல்வதில் ரொம்ப வீக் சார். இதில் முழு ஸ்கிரிப்டும் இருக்கிறது. இதை படிங்க என்றார். என்னுடைய 43 வருட திரை வாழ்க்கையில் என்னிடம் யாரும் ஸ்கிரிப்ட் புக்கை கொடுத்தது கிடையாது. BloodStone ஸ்கிரிப்ட் மட்டும் கொடுத்தார்கள். மற்றபடி இதுதான் முதல்முறை. இதில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்றதற்கு, “கிட்டத்தட்ட இதுதான் கடைசி. ஸ்பாட்டில் ஏதாவது மாறுதல் இருக்கலாம்” என்றார். நான் அதைப் படித்தேன். கதை அப்படிப்போனது. கபாலி ஜெயிலிலிருந்து வர்றான். போய் அடிக்கிறான். இண்ட்ரொடக்‌ஷன் சாங்கு, ஹீரோயிசம் இதெல்லாம் வருது. அப்பறம் பாத்தீங்கன்னா அவன் பொண்டாட்டியைத் தேடிப் போறான், போறான் போய்கிட்டே இருக்கான்.. அவரை கூப்பிட்டு பேசினேன். இதோ பாருங்க, நம்ம ரசிகர்களுக்கு பொறுமை கிடையாது. நான் ரஜினிகாந்தா கதையை கேட்டு படம் பண்ண மாட்டேன். நான் படம் பண்ணும்போது, ரசிகர்களை மைண்ட்ல வெச்சிக்கிட்டு தான் கேட்பேன். டக்கு டக்குனு போனோமா, முடிச்சோமா அப்படி இருக்கணும். இதென்ன சார் அங்கப் போறான், இங்கப் போறான்னு கேட்டப்ப, “சார் படிக்கும்போது அப்படித்தான் இருக்கும். நீங்க என்னை விட்டுப் பாருங்க நான் பண்றேன்” அப்டினு சொன்னாங்க.

வெற்றிப் படத் தயாரிப்பாளர் தாணு

அதுக்கப்பறம் நான் தாணு சாரைக் கூப்பிட்டு கதையை சொல்ல சொன்னேன். தாணு சார் என்கிட்ட 40 வருஷமா படம் பண்ணனும்னு கேட்டுட்டு இருக்காங்க. ஒரு படம் கொடுங்க சார் நான் பண்ணி காட்றேன்னு அவர் கேட்டதால, இந்த படத்துக்கான தேதியை அவருக்கு கொடுத்திருந்தேன். ஆனால், அவர் சொன்னார், “சார் நீங்க சொல்லுங்க யார் டைரக்டர்னு நான் படம் மட்டும் பண்றேன்”னு. நான் சொன்னேன், இந்தக் கதையே வேணாம். உங்க கருத்தை சொல்லுங்க, கிணத்துல விழுந்தா ரெண்டு பேரும் விழலாம். நம்மளை மட்டும் தள்ளி விடுற கதையே வேண்டாம்னு சொல்லிட்டு ரஞ்சித் கிட்ட கதை கேக்க சொன்னேன். ரஞ்சித் கதையை சொன்னதும் குமுதவல்லி ஸ்டோரியை கேட்டுட்டு, ஆஹா சூப்பர் தம்பி இதுதான் அல்டிமேட்னு சொன்னார். எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. இது எப்படின்னு கேட்டதுக்கு, இதுதான் செண்டிமெண்ட் ஸ்டோரி. இது தான் வொர்க்-அவுட் ஆகும்னு சொல்லி படம் பண்ணாங்க. தாணு சார் கபாலி படத்தை வேற லெவலுக்கு கொண்டு போய்ட்டாங்க. அவங்களாம் போஸ்டர் ஒட்டுறதுல இருந்து முன்னேறி இவ்வளவு பெரிய நிலைக்கு வந்தவங்க.

சொல்ல கஷ்டமா இருந்தாலும், அவங்க படம் பண்ண காலத்துல படம் பண்ணிக்கிட்டு இருந்த பிரசாத் ஸ்டூடியோஸ், ஜெமினி இவங்கள்லாம் இன்னைக்கு இல்லை. ஆனாலும், தாணு சார் இன்னைக்கும் வெற்றிகரமா படம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்ககிட்ட படம் கொடுத்துட்டா நாம கவலையே படவேண்டாம். கபாலி படம் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணி, அத்தனை ஆயிரம் பேரை வெச்சு மலேசியால சிறப்பா ஷூட்டிங்கை நடத்தி முடிச்சாங்க. படம் ரிலீஸாகி மிகப் பெரிய வெற்றிபெற்றது.

கபாலி படத்துக்குப் பிறகு வேறு என்ன படம் செய்வது என்று யோசித்தேன். அப்போது தனுஷின் வொண்டர்பார் ஸ்டூடியோஸ் நல்ல படங்களை எடுத்துக்கொண்டிருந்தது. என் மகளை அழைத்து, உங்கள் புரொடக்‌ஷனில் என்னை வைத்தெல்லாம் படம் பண்ண மாட்டீர்களா என்று கேட்டதை தனுஷிடம் சொன்னார்கள். அவர் வந்து நீங்க கேட்காமல் நான் எப்படி கேட்பது என்றார்.

ரஜினி கேட்ட வெற்றி மாறன் கதை

தனுஷ் ஒரு சிறந்த மனிதன். தனது குடும்பம் முதல் சினிமா வரை அனைவருக்கும் நல்ல மனிதராக இருப்பவர். வெற்றி மாறனிடம் ஒரு கதை இருப்பதாகக் கூறினார். அந்தக் கதையைக் கேட்டு ஆடிப்போய்விட்டேன். முழுக்க முழுக்க அரசியல் படமாக இருந்தது. நமக்கு அரசியல் படமே ஆகாது. காலா, அரசியல் படம் அல்ல. ஆனால், படத்தில் அரசியல் இருக்கிறது. எனவே, வெற்றி மாறனை அழைத்து. நான் அரசியல் படம் பண்ண விரும்பவில்லை என்று கூறினேன். அப்போது எனக்கு அரசியலில் வரும் எண்ணம் இல்லை. எனவே, மக்களை மீண்டும் குழப்ப நான் விரும்பவில்லை என்று சொல்லிவிட்டேன். அப்போது என்ன பண்ணலாம் என்று யோசித்து, நம்மாளு இருக்கிறாரே என்று ரஞ்சித்தை அழைத்து ஏதாவது ஐடியா இருக்கா என்று கேட்டேன். இல்லை சார், நீங்க திரும்ப கூப்பிடுவீங்கன்னு எனக்குத் தெரியாது. நான் எதுவும் யோசிக்கவில்லை என்று சொல்லிவிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது மலேசியத் தமிழர்கள் பற்றி நாம் படம் எடுத்துவிட்டோம். நான் பத்து வருடங்கள் இந்திப் படங்கள் செய்துகொண்டிருந்தேன். அங்கே தாராவி என்றொரு பகுதி இருக்கிறது. அங்கிருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள்தான். முதலில் 85 சதவிகிதம் வரை இருந்தவர்கள் இன்று 65 சதவிகிதம்தான் இருக்கிறார்கள். நீங்க அங்கே போய் பாருங்கள் என்றேன். அவர் போய் பார்த்துவிட்டு வந்து சொன்னபோது நான் சொன்னது ஒன்று தான். கபாலி உங்கள் படமாக இருந்தது ரஞ்சித். அடுத்தது காலா உங்கள் படமாகவும், என் படமாகவும் இருக்கணும் என்றேன். என் படம் என்றால் உங்கள் படம்” என்று ரசிகர்களைக் கைகாட்டினார்.

“இசை வெளியீட்டு விழாவில் இருக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால், படத்தின் கதையை சொல்ல முடியாது; சொல்லவும் கூடாது. அப்படியே கிழிச்சிட்டோம், தூள் கிளப்பிட்டோம் என்றெல்லாம் ஓவராக நாமளே பேசக்கூடாது. இந்தப்படத்தில் முக்கியமாக சொல்லவேண்டியது, இதோ இருக்கிறாரே ரஞ்சித், கண்டிப்பாக அவரது வாழ்க்கையை முடித்துக்கொள்ளமாட்டார். பெரிய ஆளாக வருவார். தான் மட்டும், வாழ வேண்டும், பெயர் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர் கிடையாது. தன்னுடைய மக்கள், தன்னைச் சேர்ந்த சமூகம், தனது நண்பர்கள், தன்னுடன் இருப்பவர்கள் அனைவரையும் மேலே கொண்டுவரவேண்டும் என்று நினைப்பவர். சமூகம் குறித்து ஆழமாக சிந்திப்பதுடன் அல்லாமல், அதை நினைத்து நொந்து நொந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவரை இவர் வயதில் நான் பார்த்ததில்லை” என்று ரஞ்சித்தின் மீதான அன்பு, மரியாதை அத்தனையையும் மேடையில் கொட்டித் தீர்த்தார் ரஜினி.

ரஜினியை அதிரவைத்த வில்லன்

காலா படத்தின் மீதான எதிர்பார்ப்புகளில் முக்கியமான ஒன்று, அதன் வில்லன். நானா பட்டேகருடனான ரஜினியின் மோதல் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு குறித்து பேசிய ரஜினி, “என்னுடைய 40 வருட வாழ்க்கையில், இரண்டு வில்லன்கள்தான் எனக்கு பெரிய சேலஞ்ச். ஒன்று பாட்ஷாவின் ஆண்டனி, படையப்பாவில் நீலாம்பரி, காலாவில் ஹரி தாதா அந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறார். நீங்க காலால நானா படேகர் பண்ணியிருப்பதைப் பாருங்கள். எனக்கே ஒரு மஜா, குஷி வந்துவிட்டது. வா, வா பாத்துறலாம்” என்று சொன்னவர் அதே குஷியில் ஒரு சிரிப்பையும் உதிர்த்தார்.

மேலும், “அவரை கையாள்வது ரொம்ப கஷ்டம். இந்தியிலேயே ஆச்சரியப்பட்டார்கள். வில்லன் கேரக்டரா, அவர் பண்றாரா என. அப்படிப்பட்ட ஒருவரைத் தனது அன்பாலேயே ரஞ்சித் வேலை வாங்கியிருக்கிறார். இதுமட்டுமில்லை. இன்னும் 4 கேரக்டர் இருக்கிறது படத்தில். வந்து பாருங்கள். அசாதாரணமாக உழைத்திருக்கிறார்கள். எப்போதுமே 2000 பேர் இயங்கும் காட்சிகள்தான் படமாக்கப்படும். மழை அடிக்கடி வந்துவிடும். இதற்கிடையில் சினிமா ஸ்டிரைக் வேறு திடீரென்று எதையும் யோசிக்காமல் அறிவித்துவிடுவார்கள். இவ்வளவு பிரச்சினைக்கும் இடையில் 85 நாட்களில் படம் எடுத்து முடித்தார் ரஞ்சித். ரவிகுமார், உங்களைப் போலவே ஒருவர் வந்துவிட்டார்” என்று கே.எஸ்.ரவிகுமாருடன் ரஞ்சித்தை ஒப்பிட்டுப் பேசினார்.

தொடர்ந்து அவரது ரசிகர்களிடம், குடும்பத்தை மகிழ்ச்சியாக வைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்த, “குடும்பம் என்பது ஒரு சிறு கோட்டை. அதைக் காப்பாற்றுவது நம் கையில் தான் இருக்கிறது. மரம், செடி வளர உரம் போடவேண்டும். அதுபோல, மனிதனின் மனம் வளர நல்ல யோசனைகளை விதிக்க வேண்டும்” என்று கூறினார்.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த நாள்

“நான் இன்னும் மேட்டருக்கு வரவில்லையே என ஊடக நண்பர்களும், என்னை வாழவைத்த தெய்வங்களும் நினைப்பார்கள். என்ன பண்றது கண்ணா இன்னும் அந்த தேதி வரவில்லையே. கடமை இருக்கிறது. நேரம் வரும். நேரம் வரும்போது ஆண்டவன் ஆசிர்வாதத்தாலும், மக்கள் ஆதரவாலும் நல்ல நேரம் பிறக்கும் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும். வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய் ஹிந்த்” என்று பேசிமுடித்தவர், சில நிமிடங்கள் கழித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனைப் பற்றிப் பேசாதது நினைவு வந்து, அவரையும் பாராட்டினார்.

விழா முடிவடைந்ததும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் வாசல் நோக்கிப் பாய்ந்த ரசிகர்கள் கூட்டம் பேருந்து நிலையங்களைத் தேடி ஓடியது. வழக்கம்போலவே, மீண்டும் வரப்போகும் ஒரு அழைப்புக்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ளத் தேவையான எனர்ஜியை ஏற்றிக்கொண்டனர் ரஜினி ரசிகர்கள்.
.

No comments:

Post a Comment