ரூ.3,250 கோடி மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடு முன்மொழிதல்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சகம் மே 11ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மாதத்தில் ரூ.3,250 கோடி மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகளுக்கு முன்மொழியப்பட்டிருந்தது. இந்த முன்மொழிதல்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது. பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதில் ஹிந்துஸ்தான் இன்ஃப்ராலாக் நிறுவனத்தில் முதலீடு செய்ய நெதர்லாந்த்தைச் சேர்ந்த டிபி வேர்ல்டு குளோபல் இன்வஸ்ட்மென்ட் நிறுவனம் முன்மொழிந்திருந்தது. ஹிந்துஸ்தான் இன்ஃப்ராலாக் நிறுவனத்தின் மூலதனப் பங்கில் 65 விழுக்காடு முதலீடு செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிதி முதலீடாக மட்டுமே இந்நிறுவனம் முதலீடு செய்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
மொத்தத்தில் கடந்த மாதத்தில் ஐந்து முதலீடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மூன்று முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு முன்மொழிதல் அந்நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஆல்கான் லெபாரட்டரீஸ் நிறுவனத்தின் முன்மொழிதல் ஏற்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கண் அறுவை சிகிச்சைக்குத் தேவையான சாதனங்கள் உற்பத்தியில் முதலீடு செய்யவுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கோரா மேனேஜ்மெண்ட் எல்பி மற்றும் கோரா எல்ஐசி நிறுவனத்தின் முன்மொழிதல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment