தஞ்சையில் திருமலைச்சமுத்திரத்தில் 1985இல் தமிழக அரசு 58.17 ஏக்கர்களை திறந்த வெளிச்சிறை கட்டுவதற்காக சிறைத்துறைக்கு அளித்தது. திறந்த வெளிச்சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஒரு பகுதியை சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்ரமித்து பல்கலைக்கான கட்டடங்களை கட்டியுள்ளது.
ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு:
தற்போது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் கட்டடங்களை இடிக்க வேண்டுமென்று சிறைத்துறை தஞ்சாவூர் ஆட்சியருக்கு கடிதம் எழுத உள்ளது அதே சமயத்தில், தமிழ்நாடுபோலீஸ் குடியிருப்பு கழகத்திடம் திறந்த வெளிச் சிறை கட்டுவதற்கான விரிவான செலவு மதிப்பீட்டையும் சிறைத்துறை கேட்டுள்ளது.
திறந்தவெளிச்சிறை கட்டுவது என்பது சிறைத்துறையின் லட்சியத்திட்டமாகும். வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்ற கைதிகள் தங்களது தண்டனைக்காலத்தில் 7 ஆண்டுகள் கழிந்த பின்னா் ,மீதியிருக்கும் தண்டனைக் காலத்தை கழிக்க திறந்த வெளிச்சிறைக்கு மாற்றப்படுவார்கள்.
திறந்த வெளிச்சிறைச்சாலை:
திறந்த வெளிச்சிறைச்சாலை என்பது மற்ற சிறைகளிலிருந்து மாறுபட்டதாகும். இங்கு கைதிகள் சுதந்திர வெளியில் காலையிலிருந்து மாலை வரை நடமாடலாம் . எந்தப்பணிகளையும் மேற்கொள்ளலாம். இங்கு மற்ற சிறைகளைப்போன்று ஒவ்வொரு செல்லுக்குமிடையே தடுப்புச் சுவர்கள் கிடையாது. இரவு நேரத்தில் மட்டும் கைதிகள் தங்களது அறைக்கு திரும்பினால் போதுமானது.
சிறைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து அதை சமாளிப்பதற்கு இந்த பிரச்சினை தொடங்கிய நாள் முதலே பல முயற்சிகளை சாஸ்திரா பல்கலைக்கழகம் செய்து வருகிறது.
ஆக்கிரமிப்பாளரின் எக்சேன்ஜ் ஆஃபர்:
சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் தாளாளரும் செயலரும் சிறைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் எல்லையோடு சேர்ந்திருக்கும் நிலத்தை தங்களுக்கு தர வேண்டும் என்றும் அதற்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 70.56 ஏக்கரை தருவதாக அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர் வைத்த திட்டத்தை அரசு 1996இல் நிராகரித்து விட்டது.
இதன்பின்னர், சாஸ்திரா பல்கலைக்கழகம் சிறைத்துறைக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அதில் தனது கட்டடங்களைக் கட்டிக்கொண்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட அதிகாரிகள் பல்கலைக் கழகத்திற்கு ஆக்கிரமித்துள்ள இடத்தை விட்டு வெளியேறுமாறு நோட்டீசை அனுப்பினா். பல்கலைக்கழகம் தங்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.
ஆக்கிரமிப்பாளரின் பேரங்கள்:
இந்நிலையில் , நில நிர்வாக ஆணையரினால் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் 20.62 ஏக்கரை சந்தையின் விலையைக்காட்டிலும் இரண்டு மடங்கு வைத்து பல்கலைக்கழகத்திற்கு விற்பது என பரிந்துரைத்திருந்தார். ஆனால் ஆக்கிரமிப்பாளருக்கே அவரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை கொடுப்பது இது போன்ற நில ஆக்கிரமிப்பு வழக்குகளில் ஒரு மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கி விடும் என்று கூறிய அரசு அந்த திட்டத்தையும் நிராகரித்து விட்டது.
இதன் பிறகும் பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு சட்ட நடவடிக்கையை எடுத்தது. அது ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நில ஆணையரின் பரிந்துரையை முன் வைத்து 2017ல் வழக்கு தொடர்ந்தது. அதையும் பரிசீலித்த நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
திறந்த வெளிச்சிறைச்சாலையை அமைப்பதற்கான பணிகளுக்கு தயாராகும் போது , சாஸ்திரா பல்கலைக்கழகம் தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களுக்கு பதிலாக 3பகுதிகளிலுள்ள நிலங்களைத்தருவதாக மாநில தலைமைச்செயலரிடம் பேரம் பேசியது. இருப்பினும் அந்த திட்டமும் தஞ்சாவூர் ஆட்சித்தலைவரால் நிராகரிக்கப்பட்டது . 2018 ஜனவரியில் சாஸ்திரா பல்கலைக்கழகம் 4 இடங்களை தருவதாக அரசிடம் திட்டமொன்றை வைத்தது. அந்த திட்டமானது அரசு முன்பாக பரிசீலினையில் உள்ளது.
அரசின் கொள்கை:
இது தொடர்பாக சிறைத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இது போன்று நிலங்களை பரிமாறிக்கொள்வது அரசின் கொள்கையில் இல்லை அதனால் பலமுறை பல்கலைக்கழகத்தின் ஆஃபர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
திறந்த வெளிச் சிறைச்சாலை கட்டுவதற்கான வடிவமைப்பு மற்றும் செலவு மதிப்பீடு தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் திட்டத்தை தொடங்கி விடுவோம் என்று கூறிய அவர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சிறைத்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவி்த்தார். மேலும் சிறந்த வெளிச்சிறைச்சாலை கட்டுவதை தாமதப்படுத்திட எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் விரைவில் திட்டத்தை தொடங்குவோம் என்றும் குறிப்பிட்டார்.
.
No comments:
Post a Comment