இந்திய வளர்ச்சி: நாணய நிதியம் கணிப்பு!
2018ஆம் ஆண்டில் உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 7.4 விழுக்காடு வளர்ச்சியைப் பெறும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள ஆசிய பசிபிக் பிராந்திய பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'பணமதிப்பழிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்ட சரிவுகளிலிருந்து இந்தியா மீண்டு வருகிறது. 2017ஆம் ஆண்டில் நுகர்வோர் விலை 3.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நுகர்வோர் விலை 5 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயரும். தெற்காசியாவில் இந்தியாவை அடுத்து 2018 மற்றும் 2019ஆம் ஆண்டில் வங்க தேசமும் 7 விழுக்காடு உள்நாட்டு உற்பத்தி உயர்வைப் பெறும்.
இலங்கை 2018ஆம் ஆண்டில் 4 விழுக்காடு வளர்ச்சியையும், 2019ஆம் ஆண்டில் 4.5 விழுக்காடு வளர்ச்சியையும் பெறும். நேபாளம் 2018ஆம் ஆண்டில் 5 விழுக்காடு வளர்ச்சியைப் பெறும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரப் பிராந்தியமாக ஆசியா இருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஆசியா 60 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளது. இந்த வளர்ச்சியில் இந்தியாவும், சீனாவும் முக்கியப் பங்காற்றுகின்றன.' பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகள் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment