சேலம் குரங்குச் சாவடி மற்றும் ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் 82.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலத்தில் போக்குவரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 13) கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் எம்.எல்.ஏ செம்மலை, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "பசுமை வழிச்சாலை மிகமிக முக்கியம். நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி உள்கட்டமைப்பை பொறுத்துத்தான் இருக்கிறது. இன்றைக்கு நாளுக்குநாள் படித்தவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்லும் பொழுது அவர்களுக்கு வேண்டிய வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். அப்படியென்றால் புதியபுதிய தொழில்கள் துவக்கப்படவேண்டும். அப்படி புதியபுதிய தொழில் துவக்கப்பட வேண்டும் என்றால் தேவையான உள்கட்டமைப்பு இருந்தால்தான், புதிய தொழில்முனைவோர் முன்வருவார்கள். ஆகவேதான், பசுமை வழிச்சாலையின் மூலமாக சேலம் பகுதி வளர்ச்சி அடைவதற்கு இந்தத் திட்டத்தை விரைவிலே கொண்டு வருவதற்கு மத்திய அரசின் மூலமாக நாம் முயற்சி செய்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
"இந்தியாவிலேயே வேளாண் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முதன்மையாக விளங்கக்கூடிய நிலை தமிழகத்திலே பார்க்க முடிகின்றது. கல்வித் துறையில் இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கை தமிழகம் தான் முன்னிலை வகிக்கின்றது. சாலைப் போக்குவரத்திலும் தமிழகத்தில்தான் சாலை சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அரசே கூறியிருக்கிறது. அந்த அளவிற்கு தமிழக அரசு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியைக் காண்பதற்கு திட்டங்களைத் தீட்டியிருக்கிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
.
No comments:
Post a Comment