நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியாவின் ஸ்மார்ட் போன் விற்பனை 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘2017ஆம் ஆண்டின் ஜனவரி - மார்ச் மாதங்களில் இந்தியாவில் மொத்தம் 2.7 கோடி ஸ்மார்ட் போன்கள் மட்டுமே விற்பனையாகியிருந்த நிலையில் 2018 ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 3 கோடியாக அதிகரித்துள்ளது. இது 11 சதவிகிதம் உயர்வாகும். ஸ்மார்ட் போன் விற்பனையில் சீனாவின் க்ஷியோமி நிறுவனம் 30.3 சதவிகித சந்தைப் பங்குடன் முதலிடத்தில் இருக்கிறது. 25.1 சதவிகித சந்தைப் பங்குடன் சாம்சங் இரண்டாமிடத்திலும், 7.4 சதவிகித சந்தைப் பங்குடன் ஆப்போ மூன்றாமிடத்திலும், 6.7 சதவிகிதப் பங்குடன் விவோ நான்காம் இடத்திலும் இருக்கின்றன. ஸ்மார்ட் போன் விற்பனை சென்ற ஆண்டைவிட உயர்ந்திருந்தாலும் இதற்கு முந்தைய காலாண்டு விற்பனையை விட இது குறைவுதான்.’
ஸ்மார்ட் போன்களின் விலையைப் பொறுத்து அவற்றின் விற்பனையும் மாறுபட்டுள்ளது இந்த ஆய்வின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. ரூ.40,000 அல்லது அதற்கு மேற்பட்ட விலைகொண்ட ஸ்மார்ட் போன்கள் 68 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ஸ்மார்ட் போன்களுக்கான தேவை மிக அதிகமாக இருந்தது. ரூ.27,000 முதல் ரூ.40,000 வரையிலான விலை கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கான பிரிவில் ஒன் பிளஸ் ஸ்மார்ட் போன்கள் 50 சதவிகித சந்தைப் பங்குடன் ஆதிக்கம் செலுத்துகின்றன.
No comments:
Post a Comment