Thursday, May 17, 2018


முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவருவதோடு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்வு செய்து நடித்துவருகிறார் நயன்தாரா. அந்த வரிசையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்துவரும் படம் ‘கோலமாவு கோகிலா’. பாடலில் புதுமை நிகழ்த்திப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துவருகிறார் அனிருத்.

‘எதுவரையோ’ பாடலை விவேக், கௌதம் மேனன் ஆகிய இருவரையும் இணைந்து எழுதவைத்த அனிருத், கல்யாண வயசு என்கிற இந்தப் பாடலை சிவகார்த்திகேயனை எழுதவைத்து பாடலாசிரியராக அறிமுகம் செய்திருக்கிறார். ‘கல்யாண வயசு’ என்ற இந்தப் பாடலின் டீசர் முன்பு வெளியானது.

அதில் யோகி பாபு, “வீட்டுக்குப் போனா யாரையாவது கல்யாணம் பண்ணிக்கச் சொல்ற அப்பா. அத்தைப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்ற அம்மா. பேரக்குழந்தைகளை பார்க்கணும்னு சொல்ற பாட்டி. இந்த டார்ச்சர் எல்லாம் தாங்க முடியாம கடைக்கு வந்தா, என்னையே ஏக்கமாக பார்க்கிற பொண்ணுங்க. ஆனா அவங்க எல்லார்கிட்டயும் ஒரே ஒரு பதில்தான் சொன்னேன். கட்டுனா அந்த பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணி கைப்பிடிப்பேன்னே. இதுவரைக்கும் அந்தப் பொண்ண யார்கிட்டயும் சொல்லல, முதன் முறையாக உங்ககிட்ட சொல்றேன்” என நயன்தாராவிடம் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதன் காரணமாக ஆண்களின் காதல் கைகூடுவதற்கு உதவி செய்யும் விதமாக நயன்தாரா நடித்திருப்பார் என யூகம் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் கல்யாண வயசு வீடியோ பாடலில் யோகி பாபு நயன்தாராவைத்தான் காதலிப்பதாகச் சொல்லி, ஒரு பெண்ணைக் கவர்வதற்கு ஆண் என்னவெல்லாமோ செய்வானோ அதையெல்லாம் நயன்தாராவைக் கவர்வதற்குச் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

நயன்தாராவைக் கவர்வதற்கு யோகி பாபு செய்யும் காட்சிகள் நகைச்சுவையாக இருக்கின்றன. சிவகார்த்திகேயன் இந்தப் பாடலுக்கு எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

கல்யாண வயசு வீடியோ பாடல்

No comments:

Post a Comment