இந்தியாவின் அரிசி மற்றும் கோதுமை விவசாயிகளுக்கு உலக வர்த்தக அமைப்பு அனுமதித்துள்ள கட்டணத்தை விட மிக அதிகமான கட்டணங்களை இந்திய அரசு வழங்குவதாக உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மே 9ஆம் தேதியன்று உலக வர்த்தக அமைப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் அந்தப் புகார் அறிக்கையில், ’உலக வர்த்தக அமைப்பிடம் தெரிவிக்கப்படும் மதிப்பை விடக் கூடுதலான சந்தை விலை ஆதரவை இந்தியா தனது அரிசி, கோதுமை விவசாயிகளுக்கு வழங்குவதாகத் தெரிகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் கோதுமைக்கான சந்தை விலை ஆதரவு கோதுமையின் உற்பத்திச் செலவில் 60 விழுக்காடாக உள்ளது. இதற்கான தகவல்களை இந்தியாவும் வெளியிட்டுள்ளது. அரிசிக்கான சந்தை விலை ஆதரவு அதன் உற்பத்திச் செலவில் 70 விழுக்காடாக இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. பத்து விழுக்காட்டுக்கும் அதிகமான கட்டணம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுவதாக உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
வேளாண் மானியங்கள் வழங்குதலில் இந்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இச்சீர்திருத்தங்கள் குறித்து உலக வர்த்தக அமைப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் தங்களது வர்த்தகக் கொள்கைகள் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment